கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெங்களூரில் இருந்து மெத்தாபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் போன்றோரை குறிவைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் ரத்தினபுரியைச் சேர்ந்த சுஜிமோகன் தலைமையிலான அந்த போதை பொருள் கும்பலை சார்ந்தவர்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
ஆகவே தனிப்படை காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் தலைமுறைவாக இருந்த சுஜிமோகன், அஸ்வின்குமார், பிரசாந்த், அமர்நாத், ராஜேஷ், பிரவீன்ராஜ், பிரதீப் உள்ளிட்ட 7 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவர்களின் கைப்பேசி எண்களை ஆய்வு செய்தபோது சுஜிமோகன் உள்ளிட்டோரிடம் வாட்ஸ் அப் மூலமாக ஒருவர் பலமுறை உரையாடியது தெரியவந்தது.அந்த நபர் பேசியது குறித்து 30க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பலுக்கு உதவி செய்தவர் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ஸ்ரீதர் (32) என்று தெரியவந்தது. போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பல் இவருக்கு பணத்தை பங்கு போட்டு பிரித்து கொடுத்திருக்கிறது. அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் ஆசிக்(30) என்பவரும் இதில் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
அதோடு ஸ்ரீதரும், அந்த வழக்கறிஞரும் இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பித்துச் செல்வதற்கு உதவி புரியும் விதமாக, அவர்கள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கையை ரகசியமாக தெரிவித்து வந்ததும் அம்பலமானது. ஆகவே காவலர் ஸ்ரீதர், வழக்கறிஞர் ஆசிக் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் போதைப் பொருட்களை விற்கும் கும்பலிடம் வாங்கிய பணத்தை வைத்து காவலர் ஸ்ரீதர், வழக்கறிஞர் ஆசிக் உள்ளிட்ட இருவரும் கோவா, கொடைக்கானல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொழுதுபோக்கியது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.