மத்திய அரசின் புதிய முயற்சியாக, மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் CEIR கண்காணிப்பு அமைப்பை கொண்டுவரவுள்ளது.
செல்போன் திருட்டை குறைக்கவும், புகாரளிப்பதை எளிதாக்கி மொபைல்களை விரைவாக மீட்கும் நோக்கிலும் இந்த வசதி அமலாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் மூலம் இச்சேவை செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த சேவையில் தொலைந்த செல்போன்களின் செயல்பாட்டை முடக்கி, அவற்றை டிராக் செய்து காவல்துறையினர் உதவியுடன் செல்போன்களை பயனர்கள் மீட்க முடியும். மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் மே 17ஆம் தேதி முதல் மற்றும் மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
CEIR இணைய சேவை மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும். அனைத்து மொபைல் போன்களிலும் கண்டிப்பாக IMEI என்ற 15 தனித்துவ எண் இருக்கும். இந்த நம்பரை பதிவு செய்து காணாமல் போன உங்கள் மொபைலை விரைவாக மீட்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செல்போனின் மாடல், IMEI எண்கள், திருடப்பட்ட இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
இதனால் மொபைல் திருட்டு குறைய வாய்ப்புள்ளது. தகவல் சரியாக இருக்கும் பட்சத்தில் 24 மணி நேரத்துக்குள் செல்போன் முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும். மீட்ட பின்னர் பயனர்கள் செல்போனை அன்பிளாக் செய்து வழக்கம் போல பயன்படுத்தலாம். இதன் மூலம் திருடர்களை அடையாளம் காண்பது போலீசாருக்கு எளிதாகும். இந்த CEIR அமைப்பு மே 17 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. IMEI எண்ணின் மூலம் தொலைந்த போன்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.