தங்க நகைக்கடன் வழங்க கடுமையான கட்டுப்பாடு..‌! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!

mk Stalin 2025 4

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


இது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்; விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் கடுமையான கவலையை தெரிவிக்கவே இக்கடிதம் எழுதுகிறேன். தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும்.

அதனால் தமிழகத்திலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகள் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைப்பதுடன், கடன் வாங்கும் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதையும் குறைத்துவிடும்.

நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும். மேலும், சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம்.

இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, நகைக்கடனுக்காக முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். விவசாய சமூகத்துக்கும் கிராமப்புற பொருளாதாரத்துக்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் தாங்கள் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Read More: ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா..? டூப்ளிகேட் ஆதாருக்கு அப்ளை செய்வது எப்படி..? ஆன்லைனில் நீங்களே வேலையை முடிக்கலாம்..!!

Vignesh

Next Post

சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்க கூடாது!. பெண்கள் தொடக்கூடாது!. ஏன் தெரியுமா!.

Thu May 29 , 2025
பலர் தங்கள் வீடுகளில் சிவபெருமான் நடனம் ஆடும் படங்களை வைத்திருக்கலாம்… வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாண்டவம் ஆடும் இந்த சிவபெருமான் மிகவும் கோபமான, உக்கிரமான வடிவமாக இருக்கிறார். இந்த படம் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம், ஆனால் இது வீட்டின் வாஸ்துவை கெடுத்துவிடும், இது வீட்டிற்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிவனின் கோப வடிவத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அமைதியின்மை அதிகரிக்கும்.. சிவபெருமானின் […]
Lord Shiva picture 11zon

You May Like