சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவான பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபியை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் ஆஜராகவில்லை எனில் கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயராமன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தனது இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயராமன் தரப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் ஜெயராமன் மீதான இடைநீக்க உத்தரவை திரும்ப பெறப் போவதில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இடைநீக்கம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஜெயராமன் தொடர்புடைய விசாரணையை வேறு பிரிவுக்கு மாற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப்பிரிவு விசாரணைக்கு மாற்றுவது பற்றி தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.