பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை மறைக்க பாமகவிற்குள் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க சூழ்ச்சி.
இந்த பிரச்சனைக்கு நானோ ஐயாவோ காரணம் கிடையாது. ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். பா.ம.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் தி.மு.க-வின் முயற்சி எடுபடாது. திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம். பா.ம.க நடத்திய கூட்டத்தால் தி.மு.க-வுக்கு வயிற்றெரிச்சல். மாநாட்டின் கூட்டத்தை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. பொது வெளியில் தந்தையிடம் மன்னிப்பு கேட்டும் விட்டுக் கொடுக்காத ராமதாஸ் தொடர்ந்து பல்வேறு மாவட்டச் செயலாளர்களையும் தலைவர்களையும் நீக்கி வருகிறார். இந்த நிலையில் பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என்ற அன்புமணியின் குற்றசாட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்திலிருந்து மீண்டும் சென்னை சென்றுள்ள ராமதாஸ், அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் என திமுகவுக்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறி வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.
Read more: திருச்சி அருகே நடந்த சாலை விபத்து.. முசிறி கோட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே பலி..