ஈரான் மீது நேரடி ராணுவத் தாக்குதலை அமெரிக்கா நடத்துமா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு இது ஒரு “கணிசமான வாய்ப்பு” என்று அவர் குறிப்பிட்டார். ஈரானின் பெரிதும் பலப்படுத்தப்பட்ட ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இடம் ஒரு மலையின் அடியில் மறைந்துள்ளது, மேலும் அமெரிக்க இராணுவத்தின் மேம்பட்ட பதுங்கு குழி குண்டுகளால் மட்டுமே ஊடுருவ முடியும் என்று நம்பப்படுகிறது.
ஈரான் – இஸ்ரேல் மோதல்
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல உயர் ரக இலக்குகளை குறித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரானும் தொடர்ந்து பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் டெல் அவிவ் அருகே குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்த, இதில் சுமார் 240 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி லட்சியங்களைத் தடுக்க நீண்ட காலமாக முயன்று வரும் இஸ்ரேல், கடந்த வாரம் ஈரானிய அணு விஞ்ஞானிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில் இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றாலும், இந்தத் தாக்குதல் பல ஆய்வகங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது, பல ஆண்டுகால அறிவியல் பணிகளை அழித்துவிட்டது.
இதனால் போர்ப் பதற்றம் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற உலக நாடுகள் விரைந்து வருகின்றன. இந்த மோதல் வணிக விமானப் போக்குவரத்தை சீர்குலைத்து, பிராந்திய வான்வெளியை மூடுவதால், இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து தங்கள் குடிமக்களை அகற்ற வான், நிலம் மற்றும் கடல் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் நாடுகள் பயன்படுத்துகின்றன.
அந்த வகையில் வடக்கு ஈரானில் இருந்து 110 மாணவர்களை சாலை வழியாக ஆர்மீனியாவின் யெரெவனுக்கு இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளது. பின்னர் ஜூன் 18 அன்று சிறப்பு விமானத்தில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்திய குடிமக்களை அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து பாதுகாப்பான மண்டலங்களுக்கு மாற்றுவதற்கு தெஹ்ரானில் உள்ள தூதரகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. மேலும் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
Read More : இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நிதி, இராணுவ ஆதரவாக இருக்கும் அமெரிக்கா!. என்ன காரணம்?. வெளியான புள்ளிவிவரங்கள்!.