தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..
ஆனால், அதிகாரம், பதவிக்காக அதிமுகவை வேலுமணி தரப்பு பிரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டி இருந்தது. அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் வரை அதிமுகவினருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக முதலில் கூறப்பட்டது.. பின்னர் 2 அமைச்சர்கள் அதிமுகவுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.. அந்த அடிப்படையில் தான் தவெக ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவளித்தனர்.. ஆனால் அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை என்று தவெக தரப்பில் கூறப்பட்டதால் எஸ்.பி.வேலுமணி தரப்பு கடும் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக மட்டுமே சொல்லியிருந்தோம்.. தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுகிறோம் என்று எப்போது கூறினோம்.. நாங்கள் அமைச்சர்வையில் இடம்பெறுவதாகவும், அமைச்சர் பதவி வழங்கப்படாததால் ஏமாற்றத்தில் உள்ளதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.. எங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக இதை தொடர்ந்து செய்து வருகின்றனர்..
திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு என்று தெளிவுப்படுத்திவிட்டோம்.. எங்களை பொறுத்தவரை, அதிமுக தோல்வியை எப்படி சரிசெய்வது என்பதை பேசிக் கொண்டிருக்கிறோம்.. அதிமுகவில் பிளவு என்று கூறுகின்றனர்.. எங்களுக்குள் எந்த பிளவும் கிடையாது.. எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது… அவ்வளவு தான்.. எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் பொதுச்செயலாளர்..
அதிமுகவின் தோல்வி குறித்து பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டும் என்று தான் கூறி வருகிறோம்.. ஆனால் நாங்கள் பதவிக்காக தவெகவுக்கு வழங்கியதாக சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. இதற்கு நாங்களும் விளக்கம் சொல்லிவிட்டோம்.. ஆளுங்கட்சி தரப்பும் விளக்கம் அளித்துவிட்டனர்.. தவறான செய்திகளை பரப்புவது வருத்தமாக இருக்கிறது.. சிலர் திட்டமிட்டு எங்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.. இது முற்றிலும் தவறானது.. அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம்.. மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியை கொண்டுவருவதற்கு உழைப்போம்..” என்று தெரிவித்தார்..
Read More : “திமுகவினர் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்..” ஆ.ராசா காட்டமாக விமர்சித்த நிலையில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!



