கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் நடத்திய விசாரணையின் பின்னர் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
பிரேத பரிசோதனையில் வந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் குழந்தைக்கு கொடூரமான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததுடன், பலமுறை அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், திருவண்ணாமலைவைச் சேர்ந்த ஜீவா என்பவர், அந்த தாயுடன் தகாத உறவிலிருந்ததும், சிறுமியை ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து, சித்திரவதை செய்து உயிரிழப்பிற்குக் காரணமானதும் தெரியவந்தது.
ஜீவா, போலீசாரிடமிருந்து தப்பிப் பாதுகாப்பதற்காக ஓடியபோது பாலத்தில் இருந்து கீழே குதித்து, அவரது காலில் எலும்பு முறிவாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த கொடூர சம்பவத்தில் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தாயே தனது குழந்தையின் மீது இந்த அளவுக்கு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டிருக்கிறாள் என்பதிலும், ஒரு 3 வயது சிறுமி இவ்வளவு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானது என்பதிலும், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிராக கடும் வேதனை மற்றும் கோபக் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
Read more: சென்னை விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. அவசரமாக தரையிறக்கம்..