முஸ்லிம் பெண்கள் குலா மூலம் தங்கள் திருமணத்தை முடிக்க முழு மற்றும் நிபந்தனையற்ற உரிமையைக் கொண்டுள்ளனர் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும், இதற்கு கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்லது.
குலா என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்யும் ஒரு வடிவமாகும், குலா (Khul’) என்பது இசுலாம் சமயத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மனைவி கணவனை திருமண முறிவு செய்யலாம். செவ்வாயன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதிகள் மௌசுமி பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி பி.ஆர். மதுசூதன் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, குலா என்பது எந்த தவறும் அல்லது சர்ச்சையும் இல்லாத ஒரு வழிமுறையாகும், இதில் மனைவியின் முன்முயற்சி தீர்க்கமானது என்றும், மனைவி குலாவைக் கோரியவுடன், அது தனிப்பட்ட மட்டத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் கூறியது.
“மனைவிக்கு குலா கேட்கும் உரிமை முழுமையானது, இதற்கு எந்த காரணமோ அல்லது கணவரின் ஒப்புதலோ தேவையில்லை. நீதிமன்றத்தின் பங்கு அதை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது மட்டுமே” என்று நீதிமன்றம் கூறியது.
வழக்கு விவரங்கள்: இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி திருமண தகராறுகளைத் தீர்க்கும் இஸ்லாமிய அறிஞர்கள், முஃப்திகள் மற்றும் இமாம்களைக் கொண்ட அரசு சாரா அமைப்பான சதா-இ-ஹக் ஷராய் கவுன்சிலால் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குல்னாமாவை ரத்து செய்யக் கோரி ஒரு முஸ்லிம் நபர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
கணவர் குலாவை ஏற்க மறுத்துவிட்டார், அதன் பிறகு மனைவி கவுன்சிலைத் தொடர்பு கொண்டு விவாகரத்து செயல்முறையை முடித்தார். குடும்ப நீதிமன்றம் கணவரின் மனுவை நிராகரித்தது, இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், குலாவை அங்கீகரிக்க முஃப்தியின் ஒப்புதல் தேவையில்லை. முஃப்தி அல்லது தாருல்-காஸாவிடமிருந்து விவாகரத்துச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. முஃப்தி பிறப்பிக்கும் ஃபத்வா வெறும் ஆலோசனை மட்டுமே, சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்று கூறியது.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தால், குலாவுக்கான கோரிக்கை செல்லுபடியாகுமா இல்லையா என்பதை மட்டுமே குடும்ப நீதிமன்றம் பார்க்கும், மேலும் இந்த செயல்முறை சுருக்கமாக இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் ஆணுக்கு ஒருதலைப்பட்ச விவாகரத்து உரிமை இருப்பது போலவே, ஒரு பெண்ணுக்கும் குலாவுக்கான அதே உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது. குர்ஆன் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை (ஷைரா பானோ 2017 மற்றும் ஷமிம் அரா 2002) மேற்கோள் காட்டி, கணவரின் ஒப்புதலுக்கு எந்த மத அல்லது சட்ட நிர்பந்தமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.