மதுரை அருகே, உடலில் கல்லை கட்டிய நிலையில், இரண்டு பிணங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகே இருக்கின்ற குன்னத்தூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு நடுவே, அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் (24) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால், காணாமல் போனார்.
இதுகுறித்து, பூவலிங்கத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன பூவலிங்கத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தான், வரிச்சியூர் நாட்டார்மங்கலம் செல்லும் குறுக்கு ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில், மனித உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஆகவே நேற்று மாலை சம்பந்தப்பட்ட கிணற்றில், காவல் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது, உடலில் கல் கட்டிய நிலையில், எலும்புக்கூடுகளோடு கூடிய உடல் கிடப்பது தெரிய வந்தது. ஆகவே, அது மனித எலும்புக்கூடு தான் என்பதை காவல்துறையினர் ஓரளவுக்கு யூகித்து விட்டனர். அதன் பிறகு, எலும்பு கூடுகளை மீட்ட காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட நபரின், உடலை கல்லால் வயிற்றில் கட்டி வெளியே தெரியாமல் இருப்பதற்காக, கிணற்றுக்குள் வீசி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று காவல்துறையினர் முடிவு செய்தனர். அதோடு, கொலை செய்யப்பட்ட நபர் பூவலிங்கமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நினைத்துள்ளனர். ஆனாலும், டிஎன்ஏ ஆய்வுக்கு பின்னர் தான் இது குறித்த உறுதியான தகவல் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
இதற்கு நடுவே, உயிரிழந்தது மூன்று மாதத்திற்கு முன்னர் காணாமல் போன பூவலிங்கமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிக்கு ஒன்று திரண்டு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சிவபிரசாத், துணை காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன் பிறகு அங்கே குழுமி இருந்தவர்களிடம், விசாரணை மற்றும் ஆய்வுக்கு பிறகு தான் உயிரிழந்தது யார்? என்று சொல்ல முடியும். ஆகவே, அது வரையில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பின்னர், அழுகிய நிலையில், இருந்த உடல் பகுதி, எலும்புக்கூடுகள் ஆகியவை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர் உத்தரவிட்டதன் பெயரில், குன்னத்தூர் வரிச்சியூர் பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்கு நடுவே, சற்று நேரத்தில் அதே கிணற்றிலிருந்து, ஒரு பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே கிணற்றில் இருந்து இரண்டு உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.