கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை:
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



