இந்து சமய அறநிலையத் துறை முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில்: ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மேற்கு மதில்சுவர் அருகே கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரஅடி பரப்பில், நவம்பர் 14-ம் தேதி முதல் 2026 ஜனவரி 12-ம் தேதி வரை 60 நாட்களுக்கு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து கொள்ளும் உரிமத்துக்கான டெண்டர் ரூ.16 லட்சத்துக்கு விடப்பட்டுள்ளது.
ஏலம் எடுத்தவரே உரிமத்தை அனுபவிக்க வேண்டும். உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும்’ என்று ஏல நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஏலத்தைக் கைப்பற்றியுள்ள பவானி திமுக நகரச் செயலாளருக்கு வேண்டப்பட்ட திமுகவினர், இங்கு உள்ள 34-க்கும் மேற்பட்ட கடைகளை, ஒரு கடைக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உள்வாடகைக்கு விட்டுள்ளனர்.
இதனால், கோயிலுக்கு சுமார் ரூ.20 லட்சத்துக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.வெறும் ரூ.16 லட்சத்துக்கு ஏலம் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை மீறி திமுகவினர் ரூ.34 லட்சம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இந்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில், இந்து சமயஅறநிலையத் துறை முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதே தவிர, ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. அறநிலையத் துறை அமைச்சருக்கு, தனது துறையின் முறைகேடுகளை கவனிக்க நேரம் இல்லை. கட்சியில் யார் பெரியவர் என்ற போட்டியில் மட்டுமே கவனம் இருக்கிறது.
உள்வாடகைக்கு விட்டால் ஏலம் ரத்து செய்யப்படும் என்ற ஏல நிபந்தனைகளின்படி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் ஏலத்தை உடனே ரத்து செய்து மறுஏலம் விடவேண்டும். அறநிலையத் துறையை தாங்கள் கொள்ளையடிக்கும் துறையாக மாற்றியிருப்பதை திமுகவினர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.



