தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்; தமிழகம் முழுவதும் 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை ஒவ்வொரு அணியும் சொல்லும் அளவிற்கு 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ‘கியான்’ என்ற பெயரில் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய 4 பிரிவுகளில் பணிகளை மேற்கொண்டால் அனைத்து தரப்பினரையும் சென்று சேர்த்து விடலாம் என பிரதமர் கூறினார். ‘கியான்’ என்றால் ஞானம். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி கட்சி பாஜக.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதல் சட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இயற்றினோம். நாம் செய்யும் நல்ல திட்டங்களின் மூலம் பொய் பிரச்சாரங்களை தடுக்க முடியும். பிரதமர் மோடி யாருக்கும் குறையின்றி ஆட்சி நடத்துகிறார். ஆனால் அவருக்கு நற்பெயர் கிடைத்து விடக்கூடாத என்ற நோக்கத்தில் தமிழக சட்டப்பேரவையில் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ். அதற்கு ஆதரவு தெரிவித்தது திமுக. ஆனால் மீண்டும் அனுமதி அளித்த பிரதமர் மோடியை குற்றம் சாட்டுகிறார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என கேட்கிறது. ஆனால் தமிழகத்தில் எதிர்க்கின்றனர். ‘நீட்’ அமலுக்கு வந்தது முதல் எதிர்க்கின்றனர். ஆனால் அந்த தேர்வால் ஏழை கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பது மூலம் மக்களுக்கான திட்டங்களை திமுக தடுக்கிறது. திமுக-வுடன் கூட்டணி இல்லை என்றால் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது. தேசியத்தையும் ஆன்மீகத்தை மனதில் வைத்து நடக்கும் கட்சி பாஜக மட்டும் தான். ‘எஸ்ஐஆர்’ திட்டத்தால் சீர்திருத்தம் வருவதை கண்டு ஏன் திமுகவிற்கு அச்சம். எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது பலவீனத்தை காட்டுகிறது என்றார்.



