கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், 19-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 20-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



