சென்னையில் மிக முக்கிய இடங்களில் ஒன்று மெரினா கடற்கரை.. 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியும் கூட. இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி பின்புறம் உள்ள ‘கல்குட்டை’ எனப்படும் பகுதியில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அண்ணா சதுக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டிருந்ததும், இரு கால்களின் பாதம் பகுதியும் வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பெண்ணின் உடலில் சுடிதார் இருந்த நிலையில், உள்ளாடை மட்டுமே காணப்பட்டதால் அவர் அரை நிர்வாண நிலையில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. தலை துண்டிக்கப்பட்டிருந்ததால், உயிரிழந்த பெண்ணின் வயதை கணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தலையும் கால்களையும் துண்டித்து அந்தப் பெண்ணை கொடூரமாக கொலை செய்து, பின்னர் கடலில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட உடல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே, அந்த பெண்ணின் வயது, உயிரிழந்த விதம் உள்ளிட்ட முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் கூறினர்.
மேலும், மாநில குற்ற ஆவண காப்பகத்தின் மூலம் காணாமல் போனவர்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போன பெண்கள், திருநங்கைகள் பட்டியல்களை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Read more: Today Rasi Palan: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வீண் செலவுகள் அதிகரிக்கும்..! இன்றைய ராசிபலன்..



