வெனிசுலா மதுரோவும் அவரது மனைவியும் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெனிசுலா அதிபர் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், தலைநகர் காரகாஸில் திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
மிராஃப்ளோரஸ் அதிபர் மாளிகையின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகள் அவற்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை விளக்கம்
இதனிடையே, வெனிசுலா அதிபர் மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் ட்ரோன் சம்பவத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 45 நிமிடங்களில், காரகாஸின் பல பகுதிகளில், குறிப்பாக அதிபர் மாளிகை அருகே, கடுமையான துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சமூக வலைதளங்களில் பரவும் பல வீடியோக்களில், இரவு வானில் ட்ரோன்களின் ஒளிகளும், வான் பாதுகாப்பு துப்பாக்கிச் சூடும் தெளிவாகக் காணப்படுகிறது. திங்கள் இரவு சுமார் 8 மணியளவில், மத்திய காரகாஸில் உள்ள மிராஃப்ளோரஸ் அதிபர் மாளிகை மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததால், பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள், மதூரோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவரது துணை டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்ற அதே நாளில் நடைபெற்றன.
நியூயார்க்கில் நீதிமன்றத்தில் ஆஜரான மதுரோ
கைகளில் விலங்கிடப்பட்டு, ஆயுதம் ஏந்திய கூட்டாட்சி முகவர்களால் சூழப்பட்ட நிலையில், மதுரோ திங்கட்கிழமை நியூயார்க் நகரத்தில் ஒரு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கினார். அவர் முன்னதாக ஒரு இரவு முழுவதும் புரூக்ளினில் உள்ள மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர், மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அழைத்து வரப்பட்டார்.
இடைக்கால அதிபராக டெல்சி ரொட்ரிக்ஸ் பதவியேற்பு
அதே நாளில், வெனிசுலா நாடாளுமன்றக் கட்டிடத்தில், துணை அதிபராக இருந்த டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றார். அவருக்கு அவரது சகோதரரும், தேசிய அவைத் தலைவருமான ஜார்ஜ் ரொட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், “எமது நாட்டின் மீது சட்டவிரோத இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டதால், வெனிசுலா மக்கள் கடும் துயரம் அனுபவிக்கின்றனர். இரண்டு வீரர்கள் கடத்தப்பட்டதற்காக நான் மிகுந்த வேதனையுடன் இங்கு வந்துள்ளேன்” என்றார்.
“நான் என் நாட்டின் அதிபர்” – மதுரோ
இதற்கிடையில், அமெரிக்காவில் நீதிமன்றத்தில் ஆஜரான மதூரோ, தன்னைப் பிடித்ததை எதிர்த்து, “நான் கடத்தப்பட்டேன். நான் என் நாட்டின் அதிபர்” என்று கூறினார். பின்னர், நீதிபதி கேட்டபோது, அவர், “நான் குற்றமற்றவன். நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன். நான் என் நாட்டின் அதிபர்” என தெரிவித்துள்ளார்.
இது, வெளிநாட்டு நாட்டின் ஒரு தலைவரை அமெரிக்கா நேரடியாகக் கைது செய்து நடத்தும் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, வெனிசுலாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறி வருகிறது.
மதுரோவும் அவரது மனைவியும், ஆங்கிலத்தில் நடைபெறும் விசாரணையை ஸ்பானிஷில் கேட்க ஹெட்செட்டுகளை அணிந்து, ஆயுதம் ஏந்திய பாதுகாப்புடன் மான்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இருவரும் சனிக்கிழமை முதல் புரூக்ளினில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டால் சிறை தண்டனை..! அரசு கொண்டு வந்த புதிய சட்டம்..!



