உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை காட்டுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.365.87 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. பணியிட மாறுதலுக்கு ரூ.7 லட்சம் தொடங்கி ரூ.1 கோடி வரை லஞ்சம் கைமாறியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாட்ஸ் அப் உரையாடல்கள், புகைப்படங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளன என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.. அதன்படி அதிகாரிகள், பொறியாளர்களை இடமாற்றம் செய்ய ரூ.365.87 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. இது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது..
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை சாடி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!
இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள்.
அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது.
உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்..



