தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சேலம் மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முதல் கோட்டை மைதானம் வரை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழி நெடுகிழும் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ரோடு ஷோ முடிந்த பின்பு பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.
கமல்ஹாசன் பேசுகையில், “இங்கே அமர்ந்திருப்பதை இந்த தேர்தலுக்கான கூட்டணியாக மட்டும் பார்க்கவில்லை. இது ஒரு திராவிட குடும்பம். நான் பேச வேண்டிய கருத்துகளை பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் முன்பே சொல்லி வைத்திருக்கிறார்கள்,” என்றார். தொடர்ந்து, தற்போதைய அரசியலை விமர்சித்த அவர், “இன்று நடப்பது மக்கள் சார்பில்லாத போலி அரசியல். நான் இங்கே வந்தது ஒரு கட்சிக்கான பிரச்சாரத்திற்காக மட்டுமல்ல; நாளை நடக்கக்கூடிய அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவே,” எனக் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு 33% ஒதுக்கீடு குறித்து பேசும்போது, “இதனை புதியதாக காட்ட வேண்டாம். இது ஏற்கனவே பலர் கூறிய கோரிக்கை. ஆனால் அதை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று தெரிவித்தார். மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜ்யசபா செல்லும் வாய்ப்பு குறித்து பேசுகையில், “தமிழகத்தின் எதிர்காலம் முக்கியம் என்பதால் முதல்வர் என்னை செல்ல ஊக்குவித்தார்,” எனவும் கூறினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “நான் பல கூட்டங்களை பார்த்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு கூட்டம் இதுதான் முதல் முறை. என் அண்ணன் ஸ்டாலின் தான் பெண்களின் பாதுகாவலர்,” என்று கூறினார். மேலும், “இந்த தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி என்றே இல்லாத நிலை உருவாகும். நான் என் தொகுதிக்கே மட்டும் சென்று பிரச்சாரம் செய்யவில்லை. என்னை அழைத்த எல்லா இடங்களுக்கும் சென்றேன்,” என்றும் குறிப்பிட்டார்.
விஜய் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “திமுக என்பது 75 ஆண்டுகள் பழமையான கட்சி. நீங்கள் (விஜய்) இப்போது தான் அரசியலில் வந்துள்ளீர்கள். லாலிபாப் சாப்பிடும் குழந்தை மாதிரி… அரசியலில் நீங்கள் சின்ன பையன், ஹீரோ இல்லை,” என்று பேசினார்.



