தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் மோதுவைத்தால் பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்கு செலுத்தி வருகின்றனர். தேர்தலில் வாக்களிக்க தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்தார். கடந்த முறை சைக்கிளில் வந்து கவனம் ஈர்த்த விஜய், இன்று காரில் வந்தார்.
அவரை காண காலை முதலே தொண்டர்கள் கூடியிருந்தர். விஜய் வாக்குச்சாவடிக்கு வந்ததும் தொண்டர்கள் காரை சூழ்ந்தனர். அப்போது அங்கிருந்த சாமியானா பந்தல் சரிந்து விழுந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மற்றும் பவுன்சர்கள் விஜயை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றனர்.
அப்போது கீழே ஒரு செல்போன் இருப்பதை விஜய் பார்த்தார். உடனே அதை கீழே குனிந்து எடுத்து, “இது யாருடைய போன் பா.. ” என கேட்டதும் அங்கிருந்தவர், “அண்ணே என்னோடதுதான்” என சொன்னதும் அவரிடம் போனை விஜய் ஒப்படைத்தார். அதன் பின் தனது ஜனநாயக கடமையாற்றினார். பொது மக்களிடம் இயல்பாக பழகும் அவரின் இந்த குணத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர்.



