கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை பகுதியை சேர்ந்த 35 வயது லாரி டிரைவர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி (32) கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், வேலைக்கு சென்று வந்தபோது அந்த பெண்ணுக்கு பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சம்பவ தினத்தில், லாரி டிரைவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் ஒரே அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். வேலை முடித்து வீடு திரும்பிய கணவர் இந்த காட்சியை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக கோபத்தில் எதையும் செய்யாமல், வீட்டின் கதவை பூட்டி “திருடன், திருடன்” என கூச்சலிட்டுள்ளார். பின்னர் உறவினர்களுக்கும், மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள் அந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அந்த இளைஞர் தாம் திருட வரவில்லை என்றும், அந்த பெண்ணுடன் உள்ள தொடர்பின் காரணமாகவே வீட்டிற்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் மற்றும் இரு தரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில், கணவர் இனி மனைவியுடன் வாழ விரும்பவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இளைஞருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.இந்த சம்பவம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



