தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகள் பெற்றால் என்ன நடக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுவது இயல்பானது. வாக்கு எண்ணிக்கை நாளில் இது அரிதாகவே நிகழ்ந்தாலும், சட்டப்படி இதற்கான தெளிவான நடைமுறைகள் உள்ளன. இந்திய தேர்தல் விதிகளின்படி, இரண்டு வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றால், இறுதி முடிவை தீர்மானிக்க “லாட்டரி” (Draw of Lots) முறையே பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் மேற்பார்வையில் Returning Officer முன்னிலையில் நடத்துவார்.
இந்த செயல்முறை எப்படி நடக்கும்? வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றிருப்பது உறுதியாகியவுடன், அவர்களின் பெயர்கள் சீட்டுகளில் எழுதப்பட்டு ஒரு பெட்டியில் இடப்படும். பின்னர், அதிலிருந்து ஒரு சீட்டு எடுத்துக்கொள்ளப்படும். எந்த வேட்பாளரின் பெயர் அந்த சீட்டில் வந்துள்ளதோ, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இந்த நடைமுறை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமவாக்குகள் ஏற்பட்டால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படாது; நேரடியாக லாட்டரி முறையிலேயே முடிவு செய்யப்படும். இந்த விதி குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுவதாவது, “சமவாக்குகள் என்பது மிக அரிதான சூழல். ஆனால் அது நிகழ்ந்தால், தாமதமின்றி முடிவை அறிவிக்க லாட்டரி முறை ஒரு விரைவான மற்றும் சட்டபூர்வமான தீர்வாகும்” என்பதாகும்.
இந்த நடைமுறை பொதுவாக மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், தேர்தல் செயல்முறையின் ஒரு அங்கமாக இது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் சில இடங்களில் இதுபோன்ற சமவாக்கு நிலைகள் ஏற்பட்டுள்ளதுடன், லாட்டரி முறையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதுபோன்ற நிகழ்வு தமிழக தேர்தலில் நடந்து இல்லை.



