தமிழக அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் குறித்து தற்போது முக்கியமான விவாதம் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அந்தக் கட்சியின் அரசியல் எதிர்காலம் எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 தொகுதிகள் தேவை. இந்த இலக்கை எந்தக் கட்சியும் எட்ட முடியாத சூழல் ஏற்பட்டால், அது தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். தவெக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றால், அது நேரடியாக கூட்டணி அரசியலுக்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, ஆட்சி அமைக்க கவர்னர் சில நாட்கள் அவகாசம் வழங்குவார். அந்த காலக்கெடுவில் எந்தக் கட்சியும் அல்லது கூட்டணியும் 118 தொகுதிகள் ஆதரவை நிரூபிக்கவில்லை என்றால், அது “தொங்கு சட்டசபை” (Hung Assembly) நிலைக்கு செல்லும்.
தொங்கு சட்டசபை என்றால் என்ன? இதில் மாநில ஆளுநரின் பங்கு மிக முக்கியமாகிறது. பொதுவாக, பெரும்பான்மை அமைக்க அதிக வாய்ப்பு உள்ள கட்சியையோ அல்லது கூட்டணியையோ ஆட்சி அமைக்க அவர் அழைப்பார். பின்னர் அந்தக் கட்சி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் அரசியல் மையமாக மாறுகிறார்கள். அவர்கள் எந்தப் பக்கம் ஆதரவு அளிக்கிறார்களோ, அந்தக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெறும். இதனால் அவர்கள் “கிங் மேக்கர் (King Maker)” என அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலைமையில் சிறிய கட்சிகள் தங்களது ஆதரவுக்கு மாற்றாக அமைச்சர் பதவிகள், முக்கிய துறைகள், தொகுதி நிதி ஒதுக்கீடு அல்லது அரசியல் ஒப்பந்தங்கள் போன்றவற்றை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
Read more: கடன் வாங்கியவர் இறந்துவிட்டால்..! அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா..? விதிகள் என்ன கூறுகின்றன?



