தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை இன்னும் கிடைக்காததால், கூட்டணி கணக்குகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
இந்த சூழலில், 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். “குதிரை பேர” அரசியலைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக புதுச்சேரி சென்று எம்.எல்.ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் என தவெக பெயரை குறிப்பிடாமல் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருந்தார்.
Read more: ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா..? ரகசிய ஆவணங்களை வெளியிடும் அமெரிக்கா..!



