தவெக சார்பில் சபாநாயகர் பதவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் பெயர் முன்வைக்கப்பட்ட நிலையில், நடைபெற்ற நடைமுறைகளின் முடிவில் அவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் பதவியேற்ற ஜே.சி.டி. பிரபாகருக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துவது தான் மக்களாட்சி” என்ற ஆபிரகாம் லிங்கனின் கூற்றை மேற்கோள் காட்டி, சட்டமன்றத்தில் அனைவரும் சமம் எனக் குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் இதயமாக சட்டமன்றம் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து சபாநாயகரை இருவர் கைப்பிடித்து அழைத்து செல்வதற்கான வரலாற்றுப் பின்னணியையும் விஜய் நினைவுகூர்ந்தார். மன்னராட்சி காலத்திலேயே இங்கிலாந்தில் பாராளுமன்றம் இயங்கி வந்ததாகவும், அப்போது மன்னரின் முடிவுகளை பாராளுமன்றம் நிராகரித்தால், அதை மன்னரிடம் தெரிவிக்க வேண்டியது சபாநாயகரின் கடமையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
அத்தகைய சூழலில், பாராளுமன்ற முடிவுகளை மன்னரிடம் எடுத்துச் சொல்லும் சபாநாயகருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும், சில நேரங்களில் மரண தண்டனையும் விதிக்கப்பட்டதாகவும் விஜய் குறிப்பிட்டார். இதன் காரணமாக சபாநாயகர் பதவியை ஏற்க யாரும் முன்வராத சூழல் ஏற்பட்டதாகவும், அதனால் அவை மூத்தவரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சபாநாயகரை கைப்பிடித்து இருக்கைக்கு அழைத்து செல்லும் மரபு உருவானதாகவும் அவர் விளக்கினார்.
“ஜனநாயக நாடுகளிலும் இந்த மரபு இன்றளவும் தொடர்கிறது” என விஜய் கூறியபோது, அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது. மேலும், தற்காலிக சபாநாயகர் கருப்பையாவுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் விஜய், பேரவையின் மாண்பும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.



