திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அதிகாலை நடந்த சாலை விபத்தில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் உத்தாண்ட குமாரவலசு பிரிவு அருகே, திருச்சி–கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் சோதனைச் சாவடி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சாலையில் சவுக்கு கட்டை ஏற்றி வந்த லாரி ஒன்று சாலை தடுப்பு மீது மோதியுள்ளது. இதையடுத்து லாரியை சாலையோரமாக நிறுத்திய ஓட்டுநர் மற்றும் அங்கு பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் இருவரும் தடுப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் அதே திசையில் அதிவேகமாக வந்த மகேந்திரா சைலோ கார் ஒன்று, லாரி ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த காவலர் மீது மோதியதாக கூறப்படுகிறது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியிலும் மோதியதால் வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காவலர், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த நான்கு பேர் உட்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயரச் சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், காங்கேயம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புட் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Read more: NEET விவகாரத்தில் மௌனம் காக்கும் தவெக அரசு..! வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்!



