காங்கோ மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றை, உலக சுகாதார அமைப்பு “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை” என அறிவித்துள்ளது. குறிப்பாக எபோலா வைரஸின் புண்டிபுக்யோ வகை பரவல் காரணமாக இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டின் இடுரி மாகாணத்தில் உள்ள புனியா, ருவாம்பாரா மற்றும் மோங்ப்வாலு பகுதிகளில் அதிகளவில் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும், உகண்டா தலைநகர் கம்பாலாவிலும், காங்கோவிலிருந்து வந்த பயணிகளுடன் தொடர்புடைய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். காங்கோ தலைநகர் கின்ஷாசாவிலும் ஒரு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, காங்கோவில் 240-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின்னர், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 88 உயிரிழப்புகளையும், 330-க்கும் மேற்பட்ட சந்தேகிக்கப்படும் நோயாளிகளையும் பதிவு செய்துள்ளது.
இந்த நோய்ப் பரவல் அதிக கவலையை ஏற்படுத்துவதற்குக் காரணம், தற்போது பரவி வரும் புண்டிபுக்யோ வகை எபோலா வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாததே ஆகும். முன்னர் பரவிய ஜைர் வகை எபோலாவுக்கு மட்டும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எல்லை தாண்டிய பரிசோதனைகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும், தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்கவும் உலக சுகாதார அமைப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், எல்லைகளை மூடுவது அல்லது வர்த்தகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.
எபோலா வைரஸ், பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம், வாந்தி, உமிழ்நீர் உள்ளிட்ட உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு ஏற்படும் போது பரவுகிறது. காற்றின் மூலம் இந்த வைரஸ் பரவாது என்றாலும், நெருங்கிய மனிதத் தொடர்பு மூலம் வேகமாகப் பரவக்கூடும். தொற்று ஏற்பட்ட இரண்டு முதல் 21 நாட்களுக்குள் காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசை வலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். நோய் தீவிரமடைந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, எபோலா வைரஸின் மரண விகிதம் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை இருக்கக்கூடும். தற்போது பரவி வரும் புண்டிபுக்யோ வகை வைரஸால் 50 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக காங்கோ சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.



