மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தவெக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தவெக பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்றால் அது ஜோசியம் சொல்லுவது மாதிரி தான் இருக்கும். குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் ஒரு அரசின் செயல்பாடுகளை சரியாக மதிப்பிட முடியும் என்றார்.
மேலும், “சுதந்திர இந்தியாவில் யாருக்கும் கட்சி தொடங்கி போட்டியிட உரிமை உள்ளது. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கட்சி தொடங்கினாலே அது திராவிடக் கட்சிதான். புதியவர்களை குறைவாக மதிப்பிடக் கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாகவும் எதிர்பார்க்கக் கூடாது. என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், “கமல்ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் பொறாமைப்பட்டிருப்பேன்” என ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்த கருத்து குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “அவர் அதை சிரிப்போடு தான் சொன்னார். எங்களுக்குள் திரைப்பட ரீதியாக போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை என்ற ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை,” என்று கூறினார்.
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் கமல்ஹாசன் அங்கிருந்து சென்றுவிட்டார்.



