1992-ல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விஜய் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக திரையுலகில் தடம் பதித்தார். அவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. திரையுலகில் ஒரு திரைப்படத்திற்கே பல நூறு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த சி. ஜோசப் விஜய், தற்போது மாத சம்பளம் வாங்கும் முதலமைச்சராக உள்ளார்.
சினிமா உலகில் கோடிகளில் புரண்ட சம்பளத்தைத் துறந்து மக்கள் பணிக்காக வந்துள்ளேன் என தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறியிருந்தது பரவலாக கவனம் பெற்றது. இந்நிலையில், ஒரு முதலமைச்சராக அவருக்கு கிடைக்கும் மாத ஊதியம் மற்றும் அரசு சலுகைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் அனைத்தும் அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில், முதலமைச்சரின் மொத்த மாத ஊதியமும் அதனுடன் இணைக்கப்பட்ட வகையில் வழங்கப்படுகிறது.
தகவல்களின் படி, முதலமைச்சருக்கு அடிப்படைச் சம்பளம், தொகுதி படி, வாகன படி மற்றும் தொலைபேசி படி ஆகியவை சேர்த்து மாதத்திற்கு சுமார் ரூ.2,05,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இது தவிர, அரசு பணியில் இருப்பதால் நேரடி பண மதிப்புக்கு அப்பாற்பட்ட பல்வேறு நிர்வாக மற்றும் பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ சலுகைகளில் சென்னை பசுமைவழிச் சாலையில் அரசு பங்களா, அரசு வாகனங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், பயணச் செலவுகள் மற்றும் உயர் நிலை ‘Z+’ பாதுகாப்பு ஆகியவை அடங்கும். மேலும், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கான செலவுகளும் அரசால் ஏற்கப்படுகிறது.
சினிமாவில் ஒரு படத்திற்கே பல நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருந்த ஒருவர், தற்போது மாதச் சம்பள அடிப்படையில் மாநிலத்தை வழிநடத்துவது குறிப்பிடத்தக்க மாற்றமாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் வியப்பை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் மக்கள் சேவைக்கான அரசியல் முடிவாகவும் விவாதிக்கப்படுகிறது.
Read more: அழகு நிலையங்களில் ஊசி பயன்பாட்டுக்கு தடை.. அவை அழகுசாதன வகையில் வராது..! – CDSCO கடும் எச்சரிக்கை



