உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் இறுதிச்சடங்கின் போது, சரயு ஆற்றில் குளிக்கச் சென்ற 30 வயது இளைஞர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தீபக் ஷர்மா என்பவரே இந்த துயர சம்பவத்தில் சிக்கியவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபக் ஷர்மா, புற்றுநோயால் உயிரிழந்த தனது மாமியார் உர்மிளா தேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்துடன் கோண்டா மாவட்டத்தின் உம்ரி கிராமத்திற்கு வந்திருந்தார். புதன்கிழமை நண்பகல், சரயு ஆற்றங்கரையில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, அவர் ஆற்றங்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், தகன ஏற்பாடுகளுக்காக மரக்கம்புகளை நட்ட பிறகு தீபக் ஆற்றின் அருகே நின்றுகொண்டிந்தார். அப்போது திடீரென நீரிலிருந்து வெளியே வந்த முதலை, அவரை தன் தாடைகளால் கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அங்கு இருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அந்தப் பகுதியில் முதலைகள் அடிக்கடி தென்படுவதால் ஆற்றுக்குள் செல்ல வேண்டாம் என்று தீபக்கை முன்கூட்டியே எச்சரித்ததாகவும், ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அவர் உதவிக்காக அலறியபோது, அருகிலிருந்தவர்கள் மற்றும் படகோட்டிகள் உடனடியாக மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், மாலை வரை தீபக் ஷர்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: நுரையீரலை போல இதயத்தில் ஏன் புற்றுநோய் வருவதில்லை..? – மருத்துவர் விளக்கம்!



