நாட்டின் எல்லைகள் விரைவில் முழுமையான “ஸ்மார்ட் எல்லை” (Smart Border) மாதிரியின் கீழ் மேம்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார். எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) நிறுவன இயக்குநரான கே.எஃப். ருஸ்தம்ஜியின் நினைவாக நடைபெற்ற ‘ருஸ்தம்ஜி நினைவுச் சொற்பொழிவில்’ பேசிய அவர், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை அதிவேகமாக ஏற்று வருவதாகக் கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லைப் பகுதிகளில், அதிநவீன கேமராக்கள், ரேடார்கள், உணர்விகள் (sensors), கண்காணிப்புக் கருவிகள் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்புத் தளங்கள் உள்ளிட்ட மேம்பட்ட எல்லைக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்..
இந்த ஆண்டிற்குள், இவ்விரு சர்வதேச எல்லைகளிலும் பெரிய அளவிலான ‘ஸ்மார்ட் வேலி அமைப்புகள்’ மற்றும் ‘ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்புகளை’ (Integrated Border Management Systems) நடைமுறைப்படுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நில ஒதுக்கீடு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தை மேற்கு வங்க அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊடுருவல் முயற்சிகள், ட்ரோன் நடமாட்டங்கள், கால்நடை கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சந்தேகத்திற்குரிய எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாகக் கண்டறிய இந்த புதிய கட்டமைப்பு உதவும் என்று ஷா கூறினார். இதன் மூலம் பாதுகாப்பு முகமைகளுக்கு நிகழ்நேர எச்சரிக்கைகள் கிடைக்கும் என்றும், இது எல்லைப் பாதுகாப்பை முன்னெப்போதையும் விட மிகவும் திறம்பட வலுப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நக்சலிஸம் குறித்த விவகாரத்தில் பேசிய ஷா, அரசாங்கத்தின் உத்தி தற்போது தீர்க்கமான முடிவுகளைத் தந்து வருவதாகத் தெரிவித்தார். ” 50 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு பிரச்சனை தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது; இந்தியா ‘நக்சல் இல்லாத நாடாக’ மாறுவதை நோக்கி அதிவேகமாக முன்னேறி வருகிறது. எங்கள் படையினர் களத்தில் இதை நிரூபித்துள்ளனர். ஒரு பிரச்சனையை வெறும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது மட்டும் சரியான பாதுகாப்பு கொள்கை ஆகாது; அதை வேரோடு களைவதே உண்மையான தீர்வாகும்,” என்று கூறினார்.
எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து உறுதியான செய்தியை வெளியிட்ட அவர், “பயங்கரவாதம் மற்றும் ஊடுருவல் முயற்சிகளுக்கு இந்தியா ஒவ்வொரு முறையும் வலுவான பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு நாங்கள் மூன்று முறையும் பதிலடி கொடுத்துள்ளோம்; தேவைப்பட்டால், அவர்களின் எல்லைப் பகுதிக்குள்ளேயே நுழைந்தும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று கூறினார்.
BSF-க்கு காத்திருக்கும் கூடுதல் பொறுப்புகள்
எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) இனிமேல் இன்னும் பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்தார். எல்லை தாண்டிய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, BSF உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நெருக்கமாகச் செயல்படும் என்று அவர் கூறினார். குறிப்பாக இந்தியா-வங்கதேச எல்லையில், கிராம நிர்வாக அலுவலர் (Patwari) நிலை அலுவலகங்கள் முதல் மாவட்ட நிர்வாகம் வரை அனைத்து மட்டங்களிலும் ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்படும். ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்துவது அல்லது திருப்பி அனுப்புவது மட்டுமல்லாமல், சட்டவிரோத நுழைவு முயற்சிகளை வேரோடு ஒழிக்கும் திசையில் BSF செயல்படும் என்றும் ஷா மேலும் தெரிவித்தார்.
அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருவதாக ஷா கூறினார். ‘ஸ்மார்ட் எல்லைத் திட்டங்கள்’ மற்றும் வேலி அமைக்கும் பணிகளுக்கு BSF-க்கு முழுமையான நிர்வாக ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில், நில ஒதுக்கீடுப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டன; ஒதுக்கப்பட்ட நிலம் ஏற்கனவே BSF-இடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எல்லைப் பாதுகாப்புத் திட்டங்களில் ஏதேனும் தடைகள் எழுந்தால், நிர்வாகம் BSF-இன் பக்கம் உறுதியாகத் துணை நிற்கும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
Read More : ‘கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்’.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பரபரப்பு கோரிக்கை..!



