“அல்லு சில்லுகளின் ஆதரவோடு ஆட்சி.. ஆனா முதல்வர் விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது..” டிடிவி தினகரன் காட்டம்..!

ttv dinakaran vijay

நேற்றைய திருச்சியில் தவெக சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது திமுகவை கடுமையாக சாடிய அவர் அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்று விமர்சித்தார்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசை குற்றம்சாட்டிய அவர் தன் மீது பழி சுமத்துவதாகவும் கூறினார்.. முதல்வரின் இந்த பேச்சு தேர்தலுக்கு பிந்தைய பிரச்சாரம் போல இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் விஜய்யின் பேச்சை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து – ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது. நேற்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அவரது சினிமா வசனங்களும், அடுக்குமொழி பேச்சுகளும், விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே பொதுமக்களுக்கும் அளித்துள்ளன.

அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு, கொலை-கொள்ளை, லஞ்சம் கேட்டு மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், மருத்துவமனைகளில் நிலவும் அவலங்கள் போன்ற சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அவசர பிரச்சினைகளுக்கு அந்தக் கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா?

தவெகவுக்காக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் கூட இன்று நியூஸ் பார்க்கும் நிலையில் உள்ளார்கள் என்று கூறும் திரு ஜோசப் விஜய் அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் அந்த நியூஸ்களில் வருவதை பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.

மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற கடன் சுமையைக் காரணம் காட்டி அரைகுறையாகத் திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்களையும் விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறார்.

தேர்தலுக்கு முன்பே தமிழகத்தின் கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தெரிந்திருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ? அதைத்தான் செய்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தனது சுய விளம்பரத்திற்காக மட்டுமே அறிவித்த இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும் போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என விவசாயிகள் வேதனையைத் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது என தீர்ந்த சக்திகள், மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு, அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு அவர்கள் அனைவரையும் சட்ட சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா? அல்லது குதிரை பேர அரசியலா?

ஆகவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : தவெக நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் இதுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? அண்ணாமலை கேள்வி..!

English Summary

AMMK General Secretary TTV Dhinakaran has criticized Chief Minister Vijay’s speech.

RUPA

Next Post

இந்தியாவில் எபோலா பீதி… புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு..! இவர்களை தனிமைப்படுத்த வேண்டும்..!

Tue Jun 2 , 2026
காங்கோ மற்றும் உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருவதால், இந்திய அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்து வருகிறது. எபோலாவின் மிகவும் ஆபத்தான ‘Bundibugyo’ வகை (strain) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஜனநாயகக் குடியரசு காங்கோ (DRC), உகாண்டா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளுக்கு, மிகவும் […]
ebola india

You May Like