சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெற்றோர் பிள்ளைகளை கொலை செய்வதும், பிள்ளைகள் பெற்றோரை கொலை செய்வதும் கவலைக்கிடமான அளவில் அதிகரித்து, சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில், 50 வயதான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். பூ, மாலை விற்பனை செய்து வரும் இவருக்கு, 25 வயதான ரூபேஷ் என்ற மகன் உள்ளார். ரூபேஷ், டாட்டூ கலைஞராக சென்னையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு போதையில் வீட்டுக்கு சென்ற ரூபேஷுக்கும் அவரது தந்தை ஏழுமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, தனது மகன் ரூபேஷை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரூபேஷ், ரத்த வெள்ளத்தில் கதறி துடித்துள்ளார்.
ரூபேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரூபேஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ரூபேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் ஏழுமலையை கைது செய்தனர். தான் பெற்ற மகனை தந்தையே துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



