சமீப காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகள் காரணமாக குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள், வன்முறைச் சம்பவங்கள், உயிரிழப்புகள் போன்ற துயரமான நிகழ்வுகள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் நலன் குறித்த கவலையை அதிகரித்துள்ளன.
அந்த வகையில், தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலம், அநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்பல நாயுடு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் ஹேமா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் அப்பலநாயுடு, அவ்வப்போது மட்டுமே தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டுச் செல்வார். இதனிடையே, வீட்டில் தனியாக இருந்த ஹேமாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கங்காதர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஒருகட்டத்தில், இவர்களின் பழக்கம் குறித்து ஊர் மக்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும், ஊர் மக்கள் இதுகுறித்து அப்பலநாயுடுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தனது மனைவியிடம் இது குறித்து எதுவும் கேட்கவில்லை. இதனால் இவரது மனைவி தொடர்ந்து தனது கள்ளக்காதலனிடம் பழகி வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன் படி, சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த அப்பலநாயுடுவுக்கு மயக்க மருந்து கலந்த உணவை அவரது மனைவி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட அப்பலநாயுடு சிறிது நேரத்தில் தூங்கியுள்ளார். பின் இவர்களின் திட்டப்படி கூலிப்படையை வரவழைத்து அப்பலநாயுடுவை கொலை செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் ஹேமாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஹேமா, நடந்த எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் ஹேமா மற்றும் கங்காதர் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு பெண்ணின் கள்ளத்தொடர்பால் 8 மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தைகள் அனாதையாய் நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



