சென்னை கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்தவர் 25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, வேளச்சேரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 25 வயதான தமிழரசன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், “நான் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன். உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு முக்கியமில்லை” என்று கூறி, தமிழரசன் பிரியாவை ஏமாற்றி வந்துள்ளார். அவரது பேச்சை நம்பிய பிரியா, அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், தமிழரசன் பிரியாவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில், பிரியா தன்னை திருமணம் செய்யுமாறு தமிழரசனிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழரசன் அதற்க்கு மறுத்ததுடன், பிரியாவை கடுமையாக தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, இது குறித்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போன்ற நகரங்களில், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றி, பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் அண்மைக் காலமாக பல்வேறு இடங்களில் பதிவாகி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
Also Read: வழுக்கை தலையிலயும் முடி வளரணுமா? இந்த ஒரு விஷயம் மட்டும் பண்ணுங்க!



