தேர்வு காலம் வந்துவிட்டாலே, பல மாணவர்கள் சந்திக்கும் இரண்டு முக்கியமான சவால்கள் கவனம் சிதறுவதும், படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போவதும்தான். புத்தகத்தை முன் வைத்து மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாலும், மனம் வேறு எண்ணங்களில் அலைபாயும் சூழல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நீண்ட நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் பலரிடம் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அதேபோல் மூளைக்கும் சில நல்ல பழக்கங்கள் மற்றும் பயிற்சிகள் தேவை. அவற்றை தொடர்ந்து பின்பற்றினால், நினைவாற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்த முடியும்.
தொடர்ந்து நீண்ட நேரம் படிப்பதை விட, குறிப்பிட்ட நேர இடைவெளியில் படிப்பது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக, 25 நிமிடங்கள் முழு கவனத்துடன் படித்த பிறகு, 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் படிப்பைத் தொடரலாம். இந்த இடைவெளியில் மொபைல் போனை பயன்படுத்தாமல், சிறிது நடப்பது அல்லது மனதை அமைதிப்படுத்துவது மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். இதனால் கற்ற தகவல்களை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்க முடியும்.
ஒரு பாடத்தை பலமுறை வாசிப்பதை விட, அதை புரிந்துகொண்டு நினைவில் இருந்து மீட்டெடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பகுதியைப் படித்து முடித்ததும் புத்தகத்தை மூடிவிட்டு, அதில் உள்ள கருத்துகளை சொந்த வார்த்தைகளில் எழுதிப் பார்ப்பது அல்லது மற்றொருவருக்கு விளக்குவது நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதும் முக்கியம். புதிய மொழி கற்றல், புதிர்கள் விடைத்தல், சதுரங்கம் விளையாடுதல் அல்லது வழக்கமான செயல்களை வேறு முறையில் செய்வது போன்றவை சிந்தனைத் திறனை மேம்படுத்தி, மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகின்றன.
போதுமான தூக்கமும் நல்ல ஞாபக சக்திக்கு முக்கிய காரணியாகும். நாம் கற்றுக்கொண்ட தகவல்களை மூளை ஒழுங்குபடுத்தி நினைவகத்தில் பதியச் செய்வது பெரும்பாலும் தூங்கும் நேரத்தில்தான் நடைபெறுகிறது. எனவே, தேர்வுக்காக இரவு முழுவதும் விழித்திருந்து படிப்பதை விட, 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கம் பெறுவது மிகவும் அவசியம். அதேபோல், படித்த பாடங்களை குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீண்டும் திரும்பிப் பார்ப்பதும் அவற்றை மறக்காமல் வைத்திருக்க உதவுகிறது.
படிக்கும் நேரத்தில் கவனச்சிதறலை ஏற்படுத்தும் பொருட்களை முடிந்தவரை விலக்கி வைப்பதும் நல்ல பலனைத் தரும். குறிப்பாக மொபைல் போனை சைலன்ட் நிலையில் வைப்பது அல்லது வேறு அறையில் வைப்பது படிப்பில் முழு கவனத்தை செலுத்த உதவும். அமைதியான சூழல் மூளையின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும்.
தேர்வுக்கு முந்தைய நாளில் மட்டும் அதிக நேரம் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம் என்ற எண்ணம் சரியானதல்ல. தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம் காரணமாக, தெரிந்த விடைகளைக்கூட நினைவுபடுத்த முடியாத நிலை ஏற்படலாம். எனவே, தினசரி திட்டமிட்ட படிப்பு, போதுமான ஓய்வு, சரியான மறுபடிப்பு மற்றும் கவனச்சிதறலைக் குறைக்கும் பழக்கங்களை கடைப்பிடிப்பதே தேர்வில் வெற்றி பெற உதவும்.
Also Read: காலை உணவுக்கு முன்னா? பின்னாடியா? பல் துலக்க சரியான நேரம் இதுதான்!



