தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. இதில் அப்பாவி பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்களே தங்களுக்குநடக்கும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கின்றனர். இதற்கு உதாரணமாக, சென்னையில் ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவருடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று அதிகாலை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது நுங்கம்பாக்கம் ஆவின் பஸ் ஸ்டாண்டு அருகே, மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்துள்ளார்.
அட்ரஸ் கேட்பது போல பிரியாவிடம் பேசிய அந்த மர்ம நபர், பிரியாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் பதறிப்போன பிரியா, உடனடியாக இது குறித்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில், அந்த நபர் அயனாவரத்தைச் சேர்ந்த 25 வயதான தியானேஷ்வர் என்பது தெரியவந்துள்ளது. விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள தியானேஷ்வர், தனியார் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் மீது இன்னொரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் தியானேஷ்வரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதற்க்குள், கோயம்பேடு பகுதியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. அம்பத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது நண்பரான கொளத்தூரைச் சேர்ந்த கோகுல் என்பவருடன் கோயம்பேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது அந்த அறைக்கு, கோகுலின் நண்பர்களான தஞ்சாவூரைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த ஹட்ரிக்ஜான் ஆகியோரும் வந்துள்ளனர்.
அப்போது 4 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், கோகுல், லோகேஷ் மற்றும் ஹட்ரிக்ஜான் ஆகிய 3 பேரும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், மது அருந்திய நிலையில், அந்த பெண்ணை போட்டோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். இதைத்தொடர்ந்து, அவரது ஆண் நண்பர்கள் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, கோகுல், லோகேஷ் மற்றும் ஹட்ரிக்ஜான் ஆகிய 3 பேர் மீதும், கோயம்பேடு மகளிர் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



