ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இரண்டு மாத பெண் குழந்தை மர்மமான முறையில் காயங்களுடன் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் தொடர்ந்து காயங்கள் தென்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர், உண்மையை கண்டறிய ரகசியமாக கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அந்த முடிவே அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
குதா கோர்ஜி பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 2 மாத குழந்தை அடிக்கடி அழுததால், பெற்றோர் அதை இயல்பானதாகவே கருதினர். ஆனால், நாளுக்கு நாள் குழந்தையின் உடலில் நகக்கீறல்கள் மற்றும் காயங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இது சாதாரண விஷயம் அல்ல என அவர்கள் சந்தேகித்தனர். குடும்பத்தில் இருந்த ஒருவரின் மீது சந்தேகம் எழுந்த நிலையில், எந்த ஆதாரமும் இல்லாததால் நேரடியாக குற்றம் சாட்டாமல், முதலில் உண்மையை உறுதி செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி, குழந்தை தூங்கும் அறையில் யாருக்கும் தெரியாமல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. பின்னர் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தையின் அத்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் காலை கொடூரமாகத் திருகி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன.
இதையடுத்து, அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குழந்தையின் பெற்றோர் காவல்துறையை அணுகினர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அல்லது தனிப்பட்ட விரோதம் ஏதேனும் பின்னணியாக உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
Also Read: 5 மற்றும் 3 வயது குழந்தைகளை ஓடும் ரயில் முன் தூக்கி வீசிய பெற்றோர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!



