சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடைபெறும் உருவக்கேலி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை குஷ்புவின் மகள்கள் அவந்திகா மற்றும் குஷியை இழிவுபடுத்தும் பதிவுகளுக்கு நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
தான் இந்த பதிவை மிகுந்த வேதனையுடனும் கோபத்துடனும் பகிர்வதாக குறிப்பிட்டுள்ள ராதிகா, இதுபோன்ற செயல்களை பார்த்தும் பேசாமல் இருப்பது தன்னால் இயலாத ஒன்று என்று கூறியுள்ளார். ஒரு தாய், நண்பர், சக கலைஞர் மற்றும் பொது வாழ்க்கையில் இருப்பவர் என்ற முறையில், இத்தகைய இணையத் தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகளை விமர்சிப்பதற்கும், தனிப்பட்ட முறையில் ஒருவரை அவமதிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பேச்சுச் சுதந்திரம் என்ற பெயரில் பிறரை மனரீதியாக துன்புறுத்த எந்த நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை வைத்து கேலி செய்வது நகைச்சுவையோ, விமர்சனமோ அல்ல என்றும், அது சமூகத்தில் தவறான மனநிலையை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு பெண்ணின் கருத்துகளில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் அதற்காக அவரது குழந்தைகளை இழிவுபடுத்துவது நாகரிகமான சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியாது என்று ராதிகா தெரிவித்துள்ளார். நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து தாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அதிக கவனத்தைப் பெறுவதற்காக மனிதநேயத்தை இழக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடைபெறும் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களில் மௌனம் காப்பதும் தவறை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதற்கு சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இந்த விவகாரத்தில் நடிகை குஷ்புவுக்கும் அவரது மகள்களுக்கும் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ள ராதிகா சரத்குமார், சமூக வலைதளங்களில் எந்த வடிவில் வந்தாலும் மனிதநேயமற்ற உருவக்கேலி மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.
Also Read: தாமதமாக உணவு கொடுத்த மனைவி; ஆத்திரத்தில் கொடூரமாக குத்திக் கொலை செய்த கணவர்..



