ஒரு குழந்தைக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆண்டுக்காண்டு காத்திருக்கும் தம்பதிகள் ஒருபுறம்… பிறந்த குழந்தையின் முதல் அழுகையை கேட்கும் பாக்கியமே இல்லாமல் ஏங்கும் குடும்பங்கள் மறுபுறம். இப்படிப்பட்ட சூழலில், இரண்டாவது குழந்தையும் பெண் என்பதற்காக பிறந்து வெறும் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றதாக வெளியாகியுள்ள கர்நாடக சம்பவம், பெண் குழந்தைகள் மீதான சமூக மனநிலையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சிக்கபள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் இம்ரான். இவருக்கு முஸ்கான் என்ற மனைவியும், நான்கு வயது மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில், முஸ்கான் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால், தனக்கு இரண்டாவது குழந்தை ஆணாக தான் பிறக்கும் என்ற ஆசையில் இம்ரான் இருந்துள்ளார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக கடந்த 14 நாட்களுக்கு முன்பு, அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தி அடைந்த இம்ரான் தனது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன் படி, கடந்த புதன்கிழமை இரவு, அவரது குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, இம்ரான் குழந்தையை நிலத்தடி நீர் தொட்டியில் வீசியுள்ளார். குழந்தையைக் காணாததால் பதறிப்போன முஸ்கான், தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அனைவரும் ஒருபுறம் குழந்தையை தேட, அவர்களுடன் சேர்ந்து இம்ரானும் குழந்தையை தேடுவது போல் நடித்துள்ளார். பின்னர், குழந்தை தண்ணீர் தொட்டியில் கிடப்பதாக கூறி அலறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்துப் போன மொத்த குடும்பமும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் குழந்தை இறந்துவிட்டது. இது தொடர்பாக மாவட்ட மருத்துவமனையிலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இம்ரான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read:ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கு… நடிகர் விமலுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு



