குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மை, கருத்து வேறுபாடுகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் போன்ற காரணங்களால் குடும்பங்களில் கடும் விரிசல்கள் ஏற்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சில நேரங்களில் இத்தகைய மோதல்கள் வன்முறை, தற்கொலை, கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களாக மாறி சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பத்தூரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி ராஜபாளையத்தை சேர்ந்தவர் 35 வயதான பாபு. ஹாலோபிளாக் கல் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு 34 வயதான ஸ்ரீதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், ஸ்ரீதேவியின் நடத்தையில் கடந்த சில மாதங்களாக பாபுவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இதனால் விரக்தி அடைந்த ஸ்ரீதேவி, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற பாபு, தனது மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் நேற்று காலை ஸ்ரீதேவி வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பாபு தனது மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
பாபுவை தீவிரமாக தேடி வந்த போலீசார், இன்று காலை மறைவான இடத்தில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறின் போது, அங்கிருந்த சேலையால் தனது மனைவியின் கழுத்தை நெரித்து தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Also Read: எச்சரிக்கை!! செல்போனில் பலான படம் பார்த்த நபருக்கு வந்த போன் கால்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…



