கள்ளத்தொடர்பு, குடும்பத் தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை போன்றவை இன்று பல குடும்பங்களின் அமைதியை சீர்குலைத்து வருகின்றன. பெரியவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளை, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகள் பலியாகும் அவலங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. அந்த வகையில் தேனியில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்தம்பியின் மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10). இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுவர்கள் கிடைக்காததால், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அருகில் இருந்த சுமார் 100 அடி ஆழமுள்ள பாசனக் கிணற்றில் இரு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, உறவினரான 19 வயது கேசவ பாலாஜி, இரு சிறுவர்களையும் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிடித்து போலீசார் விசாரனை மேற்கொண்டதில், கேசவ பாலாஜியின் தாயாருடன், சின்னத்தம்பிக்கு தகாத உறவு இருந்ததாலும், தனது விலை உயர்ந்த செல்போனை சின்னத்தம்பியின் மகன்கள் திருடியதாலும் இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து கேசவ பாலாஜியை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



