பிரபல யூடியூபரான இர்பான், கடந்த 2024-ஆம் ஆண்டு தனது மனைவி ஆசிபா கர்ப்பமாக இருந்தபோது துபாய்க்கு அழைத்துச் சென்று பாலின நிர்ணயப் பரிசோதனை செய்தார். பின்னர் அங்கு வைத்து தனக்குப் பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்ததோடு, அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றினார்.
இந்தியாவில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதும், அதை வெளிப்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என்பதால், இர்பானின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இர்பான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறைக்கு இர்பான் மன்னிப்புக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டு விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இதற்கிடையே அவருக்குப் பெண் குழந்தை பிறந்த நிலையில், அவர் மீது எவ்விதச் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாதது கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில், சுகாதாரத்துறை இந்த விசாரணையை முடித்து வைத்ததை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, யூடியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் தற்போது முடிவு செய்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.


