இன்றைய காலத்தில் திருமண உறவுகளை சீர்குலைக்கும் கள்ளத்தொடர்புகள், நம்பிக்கை துரோகங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர். கணவன்-மனைவி இடையேயான உண்மையான அன்பும், ஒருவருக்கொருவர் உயிராக வாழும் உறவுகளும் அரிதாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், தம்பதியரின் உறவு எவ்வளவு ஆழமானதாக இருக்க முடியும் என்பதை நினைவூட்டும் வகையில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கணவரின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல், 17 நாட்களுக்குள் மனைவியும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நாகராங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முணாகோண்ட் மற்றும் அவரது மனைவி சுனிதா கோண்ட் (25) ஆகியோர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வந்து, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்ன தளிகை பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 10-ஆம் தேதி முணாகோண்ட் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து, கணவன்-மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு மனவேதனையில் இருந்த முணாகோண்ட், வீட்டின் வெளியே ஜன்னல் கம்பியில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் உயிரிழப்பு சுனிதா கோண்ட்டை கடுமையாக பாதித்தது. அதன்பிறகு அவர் அதே பகுதியில் வசித்து வந்த உறவினர் ஜிதேந்தர் கோண்ட் வீட்டில் தங்கி, வேலைக்கு சென்று வந்துள்ளார்.
ஆனால் கணவரை இழந்த வேதனையில் இருந்து மீள முடியாத சுனிதா கோண்ட், நேற்று காலை வீட்டிலிருந்த கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் உயிரிழந்த 17 நாட்களிலேயே மனைவியும் உயிரை மாய்த்துக்கொண்ட இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ‘பீரியட்ஸ்னு சொன்னாலும் கேட்க மாட்டார்’… கணவர் செய்த கொடுமையை வெளிப்படுத்திய விஜய் டிவி பிரபலம்!



