கள்ளக்காதல் என்பது ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, பலரது வாழ்க்கையையும் சீரழிக்கும் ஆபத்தான பாதையாக மாறி வருகிறது. சமூக வலைதளங்களில் உருவாகும் சில உறவுகள், நம்பிக்கை இழப்பு, மோதல் மற்றும் வன்முறையாக மாறி உயிரிழப்புக்கே வழிவகுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யாவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார்.
திருமணத்தின் தொடக்கத்தில் இருவரின் வாழ்க்கையும் சுமுகமாக சென்ற நிலையில், பின்னர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. வினோதினி அதிக நேரம் செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராமில் செலவிட்டதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான நவநீதகிருஷ்ணனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் வினோதினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமான உறவாக மாறியுள்ளது.
இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் தீவிரமடைந்த நிலையில், வினோதினி தனது கணவரைப் பிரிந்து, மகனுடன் ஈரோட்டில் பெற்றோர் வீட்டுக்கு அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அத்துடன், அங்குள்ள ஒரு ஆர்கானிக் கடையிலும் வேலை செய்து வந்துள்ளார். ஈரோட்டுக்கு வந்த பிறகும் நவநீதகிருஷ்ணனுடன் தொடர்பு நீடித்துள்ளது. ஆனால், சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவருடன் பேசுவதை வினோதினி நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன், வினோதினி வேறு ஒருவருடன் பழகுவதாக சந்தேகித்து அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவில் வினோதினியின் வீட்டிற்கு சென்ற நவநீதகிருஷ்ணன், கதவைத் திறந்ததும் வீட்டுக்குள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தன்னுடன் பேச விருப்பமில்லை என்றும், வீட்டை விட்டு வெளியேறுமாறும் வினோதினி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ பரவியதால் வினோதினி வலியால் அலறித் துடித்துள்ளார். அப்போது அருகில் இருந்த நவநீதகிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டதால், அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், வினோதினியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை கைது செய்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



