கலை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வையை உருவாக்கும். ஒரு கலைஞரின் நிகழ்ச்சியை விமர்சிப்பது தவறல்ல. ஆனால் அந்த விமர்சனம் அவரது பல ஆண்டுகால உழைப்பையும் சாதனைகளையும் மறுக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று பலரும் கருதுகின்றனர். நடிகர் பிரபுதேவாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியை விமர்சித்து சீரியல் நடிகை ப்ரீத்தி தெரிவித்த கருத்து, தற்போது நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா தனது குருமார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார். சிறுவயதில் பரதநாட்டியம் கற்றிருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மேடையில் இந்த நடனத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பார்த்த சீரியல் நடிகை ப்ரீத்தி, சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டார்.
அதில், பரதநாட்டியம் முறையாக ஆடப்படவில்லை என்றும், இதுபோன்ற வாய்ப்புகளை இளம் நடனக் கலைஞர்களுக்கு வழங்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்து சமூக வலைதளங்களிலும், நடன கலைஞர்கள் மத்தியிலும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. பல நடன இயக்குநர்களும் கலைஞர்களும் ப்ரீத்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோக்கள் மற்றும் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
பிரபுதேவாவிடம் பல ஆண்டுகள் நடனம் கற்று தற்போது நடன இயக்குநராக உள்ள நோபிள் மாஸ்டரும், இந்த விமர்சனம் தேவையற்றது என்றும், தனது குருமார்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை இவ்வாறு விமர்சிப்பது சரியல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து விளக்கம் கேட்டபோது, ப்ரீத்தி தனது கருத்தை ஏற்கனவே பதிவு செய்துவிட்டதாகவும், அதற்கு மேலாக தற்போது எதுவும் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்த விவாதம், தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
Also Read: பெற்ற தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்… பல ஆண்டுகளுக்குப் பிறகு தாய் எடுத்த அதிரடி முடிவு!



