குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டிய நிலையில், சில நேரங்களில் அவை வன்முறையாக மாறி அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்தர் ரெட்டி மற்றும் மாதவி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹைதராபாத்தில் செல்போன் கடை நடத்தி வந்த மகேந்தர் ரெட்டிக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகித்ததைத் தொடர்ந்து, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாதவி தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி மகேந்தர் ரெட்டி மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்தார். ஆனால், அங்கு மீண்டும் வாக்குவாதம் வெடித்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த பேட்டால் மாதவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் மாதவியின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மனைவி மயங்கிய நிலையில் இருந்தபோது, வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளையும் மகேந்தர் ரெட்டி அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்துவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து மாதவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள மகேந்தர் ரெட்டியை கைது செய்வதற்கும், அவருடன் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்பதற்கும் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read: அதிர்ச்சி!! குடிபோதையில், 9 மாத குழந்தையை கொலை செய்த தாய்…



