சமூக வலைத்தளங்களில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல வோல்கர் ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கணவர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகள் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த அகில் மற்றும் மேகா, சமூக வலைத்தளங்களில் பிரபலமான தம்பதியாக இருந்து வந்துள்ளனர். அகில் இந்திய கடற்படையில் பணியாற்றிய பின்னர் அந்த வேலையைத் துறந்து முழுநேர கன்டென்ட் கிரியேட்டராக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, தங்களது அன்றாட வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.
இதனால் அவர்களுக்கு கணிசமான ரசிகர் பட்டாளமும் உருவானது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இரவு அகில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மேகா திடீரென வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மனைவியை காணவில்லை என்பதை அறிந்த அகில் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க வழியாக மேகா வெளியேறிய காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
அவர் தன்னுடன் சில உடைமைகள், நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வீட்டிலிருந்து சிறிது தொலைவில் காருடன் ஒருவர் காத்திருந்ததாகவும், மேகா அவருடன் சென்றதாகவும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் உள்ளூர் பேருந்து ஓட்டுநர் என்றும், இருவருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தால் அகில் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக அவரது நண்பரும் பிக்பாஸ் பிரபலமுமான சாய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இருப்பினும், மேகாவை குறை கூறவோ அல்லது அவரை பற்றி தவறாக பேசவோ யாரும் வேண்டாம் என்பதே அகிலின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஒரு தம்பதி எப்படி தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் உண்மை நிலவரத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பதையே இந்த சம்பவம் மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது. எனினும், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் போலீஸ் விசாரணையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: “அப்பா… என்ன விட்டுருப்பா!” கதறிய பிஞ்சு குழந்தைகள்… மனைவி மீதான சந்தேகத்தில், தந்தை செய்த கொடூரம்!



