பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறை ஒன்றில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே அறையில் அவர்களின் தந்தையும் கழுத்தில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை மற்றும் மனைவி மீதான சந்தேகம் இந்தச் சம்பவத்துக்கு பின்னணியாக இருந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜி. இம்ரான் (40), தனது 5 மற்றும் 10 வயது மகள்களுடன் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றுள்ளார். பின்னர், ஓட்டல் அறையில் இருந்து குழந்தைகளின் அலறல் சத்தம் எதுவும் கேட்காமல் இருந்த நிலையில், திடீரென இம்ரானின் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அறைக்குச் சென்று பார்த்தபோது, இரு சிறுமிகளும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இம்ரான் கழுத்தில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீஸார், அங்கிருந்து இம்ரான் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மனைவியுடனான குடும்பப் பிரச்னை இந்தச் சம்பவத்தில் முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சம்பவத்திற்கான உண்மையான பின்னணி குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகே உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கெம்பேகவுடா விமான நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் மரணம், தந்தையின் தற்கொலை முயற்சி மற்றும் குடும்பப் பிரச்னையின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Also Read: “கள்ளக்காதலிக்காக எதையும் செய்வேன்!” 7 மாத கர்ப்பிணி மனைவிக்கு ராணுவ கணவன் செய்த கொடூரம்!



