கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையை ஆளும் த.வெ.க. அரசு மூடிமறைக்க பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
தம்பி அமுதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த சீமான், கல்விக்கூடங்களில் நிலவும் பகைமையும், போதைப்பழக்கமும் எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.
கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அமுதன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செட்டிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அமுதனிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னரே, ஏறக்குறைய 20 மாணவர்கள் சேர்ந்து அவரை அடித்துக் கொன்றுள்ளனர் என்பது பெற்றோரின் கூற்றை உறுதிப்படுத்துகிறது.
அப்படியிருக்கையில், போதைப் பொருள் புழக்கம் என்ற முதன்மைக் காரணத்தை மறைத்து, மாணவர்களுக்கிடையேயான குழு மோதல’ எனக் கூறி வழக்கின் கோணத்தை மாற்ற த.வெ.க அரசு முயல்வதாக அவர் சாடியுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒருவரைக் கொல்வதைக் குழு மோதல’ என்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியது மோசடித்தனம்.
தன் மீது குற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு இக்கொடுங்குற்றத்தை மறைப்பதாக குற்றம்சாட்டிய அவர், பரப்புரைக் கூட்டங்களில் தன்னை தாய் மாமன் எனக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், பலியான 19 வயது மாணவனின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
அமுதனின் படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட்டு தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தவெக அரசை அவர் கேட்டுக் கொண்டார்.
Read More : வசமாக சிக்கினார் மாஜி அமைச்சர் எ.வ.வேலு..! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!



