நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீதிமன்ற நண்பரும் மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வழக்கறிஞர் சினேகா கலிதா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 96 பக்க அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 89 வழக்குகளை எதிர்கொண்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகளும், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் மீது 18 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் (5), மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (4), இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் (4), தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (2), பீகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி (2) ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, பி.எஸ். தமாங் (சிக்கிம்), பகவந்த் மான் (பஞ்சாப்), மோகன் சரண் மாஜி (ஒடிசா) மற்றும் பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்) ஆகிய நால்வர் மீதும் தலா ஒரு வழக்கு உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் எம்.எல்.ஏ-க்களின் அதிகபட்ச சதவீதத்தைக் கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. அங்குள்ள 292 எம்.எல்.ஏ-க்களில் 170 பேர் (58 சதவீதம்) மீது கடுமையான வழக்குகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து கேரளா (57 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (56 சதவீதம்), தெலங்கானா (49 சதவீதம்), ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா (தலா 45 சதவீதம்), பீகார் (42 சதவீதம்), மற்றும் மகாராஷ்டிரா (40 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையைப் பார்க்கையில், மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் 170 எம்.பி.க்கள் (31 சதவீதம்) மீது தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநில வாரியாகப் பிரித்துப் பார்க்கும்போது, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 எம்.பி.க்களில் 34 பேரும், பீகாரில் 40-ல் 19 பேரும், மகாராஷ்டிராவில் 48-ல் 17 பேரும், மேற்கு வங்கத்தில் 42-ல் 16 பேரும் இத்தகைய வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், தெலங்கானாவில் 17-ல் 11 எம்.பி.க்களும், கேரளாவில் 21-ல் 11 எம்.பி.க்களும், ஆந்திராவில் 25-ல் 9 எம்.பி.க்களும் தீவிர குற்ற வழக்குகளைக் கொண்டுள்ளனர்.
அதேபோல், மாநிலங்களவையில் உள்ள 233 உறுப்பினர்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 40 பேர் (18 சதவீதம்) ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய தீவிரமான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, ஜூலை 2026 நிலவரப்படி நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீது 4,192 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மீதான இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க, பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என நீதிமன்ற நண்பர் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



